தமிழக அரசு உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கோவை: கோவையில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கம் சார்பில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த தொகையானது செலவுக்குப் போதுமானதாக இல்லை.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க அரசு தேர்தலுக்கு முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையும் வழங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.