கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில், 29 தூண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதே போல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில், 15 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.

இதனிடையே கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால் ஜி.என்.மில்ஸ் மேம்பாலப் பணிகள் 30 சதவீதம் கூட நிறைவடையவில்லை.
இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கவுண்டம்பாளையம் மேம்பாலப்பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும்" என்றார்.