இனிவரும் காலங்களில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை: இனிவரும் காலங்களில் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 71-மாற்றுத் திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காகப் பணி நியமன ஆணையை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காகப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடுகள் வாரியாக மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்துக் கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாகத் தெரிவித்த அவர் கணக்கெடுப்பின் பொழுது மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளைத் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
விமான நிலைய விரிவாக்கத்திற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் அவர்களுக்குத் தேவையான கோரிக்கைகள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியது குறித்தான கேள்விக்குப் பதிலளித்த அவர், அதிமுகவினர் அவர்களுடன் பயணித்தவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும், ஒருவருக்குத் தோல்வி பயம் ஏற்படும்போது தான் கோபம் வரும் எனவும், அந்த நிலையில் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அரசு மதுபானக் கடைகளைப் பொறுத்தவரை மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் தற்போது வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த மசோதாவிற்குத் தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இந்த சட்டம் விவசாயிகளுக்கு ஒரு கேள்விக் குறியான சட்டம் என முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருப்பதாகத் தெரிவித்த அவர் இனி நடக்க இருப்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும் என தெரிவித்தார்.