ஹெலிகாப்டர் நொறுங்கி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சையே நொறுக்கிவிட்டதாக இரங்கல் தெரிவித்தார்.
நீலகிரி: வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் 13 பேரின் உடலுக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள 13 பேரின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இராணுவ வீரர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது. அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்துள்ளேன். ஒரு மருத்துவராக, சிகிச்சை பெற்று வரும் விமானி வருணைப் பார்வையிட்டேன். அவரது உள்ளுறுப்புகள் சீராக செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் இந்த நேரத்தில் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும். விமானி வருணின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.