மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் புறப்படும் முதலமைச்சர், மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைய உள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல உள்ளார்.
கோவை: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை தர உள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாளை நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நஞ்சப்ப சத்திரம் என்ற காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார். ஆனால், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நீலகிரி ஆட்சியுடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணி குறித்து முதல்வர் கேட்டறிந்தார். மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை தர உள்ளார். மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் புறப்படும் முதலமைச்சர், மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைய உள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல உள்ளார்.