மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17-பேர் பலியான சம்பவம் தொடர்பாக, ஊர்வலமாகச்சென்று அஞ்சலி செலுத்த முயன்ற திராவிடர் பண்பாட்டு கூட்டமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, ஊர்வலமாகச்சென்று அஞ்சலி செலுத்த முயன்ற திராவிடர் பண்பாட்டு கூட்டமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நடூர் ஏ.டி காலனியில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி கனமழை காரணமாகத் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் அருகே கீழ் பகுதியில் வசித்து வந்த 5-வீடுகளின் மீது அந்த சுற்றுச்சுவரின் இடிபாடுகள் விழுந்தது.
அந்த இடிபாடுகளில் சிக்கி பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உட்பட 17-பேர் பரிதாபமாகப் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த டிசம்பர் 2-ஆம் தேதி கடந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தாண்டு இப்பகுதியில் அஞ்சலி செலுத்த பொது நல அமைப்பினருக்குச் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதையடுத்து, அன்னூர் சாலை, சம்பவம் நடந்த நடூர் ஏ.டி காலனி, கோவை சாலை, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் என நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அசம்பாவிதம் நிகழாமல் இருக்கும் வகையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் போன்ற வாகனங்கள் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இருந்து நடூர் ஏ.டி.காலனி வரை ஊர்வலமாகச்சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திராவிடர் பண்பாட்டு கூட்டமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.