பொள்ளாச்சி வட்டம், சூளேஸ்வரன்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் 343-பயனாளிகளுக்கு ரூ.78.83-இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: பொள்ளாச்சி வட்டம், சூளேஸ்வரன்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் 343-பயனாளிகளுக்கு ரூ.78.83-இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், சூளேஸ்வரன்பட்டி, விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று (02.12.2021) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் 343- பயனாளிகளுக்கு ரூபாய் ரூ.78.83-இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் துணை ஆணையர் (கலால்) சுபா நந்தினி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், சமூகப் பாதுகாப்பு திட்டத் தனி துணை ஆட்சியர் முருகேசன், சமூக நல அலுவலர் தங்கமணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ராம்குமார், வட்டாட்சியர் அரசகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் நலத்திட்டங்களைப் பொதுமக்கள் மென்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களைக் கொண்டு மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை உயர் அலுவலர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களையும், கடைகோடி கிராமங்களிலுள்ள மக்களையும் இணைக்கும் பாலமாக மக்கள் தொடர்பு முகாம்கள் அமைகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதற்கட்டமாக இன்று பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட சூளேஸ்வரன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் 343 பயனாளிகளுக்கு ரூபாய் ரூ.78.83இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதிகளில் உள்ள மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அம்மனுக்கள் மீது விரைவாகத் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.
இம்முகாமை போலவே, மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், கோட்டாட்சியர் தலைமையில் ஒவ்வொரு கிராம வாரியாக மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நவமலை பகுதியில் குடிசை வாழ் மக்களுக்கு அங்குள்ள 10 கி.மீ தூரத்திற்குள் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடுகள் கட்டித்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தலைமைச் செயலாளர் உத்தரவின்படி, அனைத்து பழங்குடியினர் மக்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றவர்களுக்கான தனியாகக் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்குச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும் அண்டை மாநிலத்திலிருந்து தொற்று பரவாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும், கோழிகளை ஏற்றிவரும் வாகனங்களில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் பரிசோதனை செய்யபடுவதுடன், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், டெங்குகாய்ச்சல் தடுப்பு பணியாக வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, இம்முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் 102 பயனாளிகளுக்கு ரூ.12,24,000/- மதிப்பிலும், வருவாய்த் துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா 26 பயனாளிகளுக்கு ரூ.5,70,495/-மதிப்பிலும், நகர நிலவரித்திட்ட பட்டா, 50 பயனாளிகளுக்கு, விபத்து நிவாரணத்தொகை 17 பயனாளிகளுக்கு ரூ.15,50,000/-, வேளாண்மைத்துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.7,84,653/- மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.4,64,675/- மதிப்பிலும், நத்தம் பட்டா நகல் 18 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் 15 பயனாளிகளுக்கும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தாது உப்பு கலவை 5 பயனாளிகளுக்கு, மகளிர்த் திட்டத்தின் மூலம் 03 பயனாளிகளுக்கு ரூ.17,80,000/- மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் நல வாரிய அட்டை 33 பயனாளிகளுக்கு, வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு மாறுதல், மற்றும் ஒருங்கிணைந்த சான்றுகள் 28 பயனாளிகளுக்கும், ஈமச்சடங்கு உதவித்தொகை 02 பயனாளிகள் ரூ.10,000,/- மதிப்பிலும், கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் 28 பயனாளிகளுக்கு ரூ.15,00,000/- மதிப்பிலும், என மொத்தம் 343 பயனாளிகளுக்கு ரூ.78,83,823/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன், வழங்கியதுடன், முகாமில் கலந்துகொண்ட மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.