பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் என்பவர் தான் தன்னை பற்றி பொய்யான வதந்திகளைச் சட்டத்திற்கு விரோதமாகப் போலியாகத் தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார் என்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். தற்போது உடுமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் நேற்றைய தினம் அதிமுகவின் தலைமையிலிருந்து, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கையெழுத்து இட்டது போல், உடுமலை ராதாகிருஷ்ணனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகப் போலி அதிமுக லெட்டர் பேட் ஒன்று பரவியது.
இது தொடர்பாக இன்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் என்பவர் தான் தன்னை பற்றி பொய்யான வதந்திகளைச் சட்டத்திற்கு விரோதமாகப் போலியாகத் தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குறிப்பிட்டுள்ளனர்.