கேரளாவிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பயணிகள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவைகளைத் துவக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு 21 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குக் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு கர்நாடகா, ஆந்திராவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்ட போதும், கேரளாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்ததால், அம்மாநிலத்திற்கு மட்டும் தமிழ்நாட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ரயில்கள் மூலமாக மட்டுமே இரு மாநிலங்களுக்கு இடையே பயணிகள் பயணித்து வந்தனர்.
கோவையிலிருந்து பாலக்காடு செல்வோர், இரு மாநில எல்லையான வாளையாறு அல்லது வேலந்தாவளம் வரை தமிழக பேருந்துகளில் பயணித்து அங்கிருந்து பாலக்காடு போன்ற பகுதிகளுக்கு கேரள பேருந்துகளில் சென்று வந்தனர்.
தற்போது அங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பேருந்து சேவைகளை துவக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு பேருந்துகளை இயக்க அனுமதியளித்தது.
இதையடுத்து, கோவையிலிருந்து கேரளாவிற்கு 21 மாதங்களுக்குப் பிறகு இன்று பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருந்த போதும், பெரும்பாலான பேருந்துகளும் கூட்டமின்றியே காணப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு கருதி சானிட்டைசர்கள் வழங்கப்பட்டதோடு, கொரோனா பரிசோதனையும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.