கோவையில் தற்போது உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் அவிநாசி சாலை என 4 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களாகவே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதும், காலை வேளைகளில் மழை பெய்யவில்லை. மாலைகளில் மட்டும் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் சாரல் மழை பெய்தது. காலை 8.30 மணியளவில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை துவங்கியதால், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதியடைந்தனர்.
குறிப்பாக, காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், செல்வபுரம், குனியமுத்தூர், கோவைப்புதூர், மதுக்கரை, சுந்தராபுரம், இராமநாதபுரம், சுங்கம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
மழையால், கோவையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் தற்போது உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் அவிநாசி சாலை என 4 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலைகளில் நிதானமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, கவுண்டம்பாளையம் அருகே நடைபெற்று வரும் பால வேலையால், சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. சாலைகளில் உள்ள குழிகளில், ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.