12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் கல்வித்துறை அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதிலே அளித்துள்ளது. அது திருப்திகரமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கோவை: கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் கல்வித்துறை அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதிலே அளித்துள்ளது எனவும் அது திருப்திகரமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் அமைக்கப்பட்ட கணினி ஆய்வகத்தைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சி.எஸ்.ஆர். நிதிமூலம் அரசுப் பள்ளிகளுக்குத் தனியார் உதவ வேண்டும் எனவும், சி.எஸ்.ஆர் பணிகளுக்கு என பிரத்தியேக இணையத்தளம் தயாராகி வருகிறது எனவும் விரைவில் அதை முதல்வர் துவக்கி வைக்க இருக்கின்றார் எனவும், அது நடைமுறைக்கு வரும் போது பள்ளிக்கான சிறிய தேவையும் நிறைவேறும் எனவும் தெரிவித்தார்.
கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் உடனடியாக முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி உள்ளார் எனவும், ஆனால் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதிலையே அளித்துள்ளது எனவும் அது திருப்திகரமாக இல்லை எனவும் தெரிவித்தார்.
அதற்குள் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாகவும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
அரசின் உதவி எண்ணான 14417 குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது எனவும், மாணவர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து இந்த எண்ணில் அழைத்துச் சொல்லலாம் எனவும், மேலும், பள்ளியில் safety box வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், பள்ளி கூடங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கும் போது இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
நவம்பர் 19 ம் தேதி இத்திட்டத்தைத் தொடங்கும் போது ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா காரணமாக 85% கட்டணம் மட்டுமே வாங்கத் தனியார்ப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது எனவும், கட்டணம் செலுத்த முடியாதவர்களிடம் பெறக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்த அவர்,சில பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாகப் புகார் வரும் போது, பள்ளிக்கல்வித் துறை மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மனிதாபிமானமற்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் பள்ளியின் அங்கீகாரம் மேல் கேள்விக்குறியை ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்தார்.