மருத்துவ படிப்பிற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மர்மமான முறையில் உயிரிழந்த சரவணனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மருத்துவ மேல்படிப்பிற்காக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற அவரது பெற்றோர்கள் சரவணன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வந்த நிலையில் சரவணன் பிரேத பரிசோதனை முடிவில் திட்டமிட்டே சரவணனுக்கு கையில் விஷ ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தி தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர்.
அதேப் போல் திட்டமிட்டு தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சரவணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் உயிரிழப்பிற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சரவணன் கொலையில் டெல்லி காவல்துறைக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், விரைவில் புதிய தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து அவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.