தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிறுமுகை அருகே பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 4-கிராம பழங்குடியின மக்கள் உயர்மட்ட பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிறுமுகை அருகே பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 4-கிராம பழங்குடியின மக்கள் உயர்மட்ட பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரத்தில் இருந்து வனப்பகுதியை ஒட்டி காந்தவயல், மொக்கை மேடு, ஆலூர், உளியூர் உள்ளிட்ட 4-பழங்குடியின கிராமங்களுக்குச் செல்ல கடந்த அதிமுக ஆட்சியின் போது காந்தவயல் பகுதியில் 20-அடி உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பழங்குடியின கிராமங்களுக்குச் செல்லும் உயர்மட்ட பாலமானது முழுவதுமாக நீரில் மூழ்கியது.
மேலும், இக்கிராமங்களைச் சுற்றிலும் சுமார் 2-ஆயிரம் ஏக்கரில் வாழை உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்களின் விவசாயமும் நடைபெற்று வந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்தும், இக்கிராமங்களிலிருந்தும் வருவோர் இச்சாலையில் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்வர்.
பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் விவசாய விளை பொருட்களைப் பரிசல் மூலமாகப் பணம் கொடுத்து மிகவும் சிரமப்பட்டு விற்பனைக்காக எடுத்து வந்தனர். மேலும், இக்கிராமங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறுமுகை பள்ளிகளில் பயின்று வருகின்றனர். பிரசவம் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்காகவும் சிறுமுகைக்கு வர இந்த பரிசல் பயணத்தையே நம்பி ஆபத்தையும் பொருட்படுத்தாமல் நம்பி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 105-அடியில் 103-அடியை எட்டியுள்ளதால் காந்தவயல், மொக்கை மேடு, ஆலூர், உளியூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்குச் செல்லும் சாலையும் தற்போது நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் பரிசல் மற்றும் மோட்டார் படகு மூலம் சென்று வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசு தற்போது பொள்ளாச்சி ஆழியாறு பகுதியிலிருந்து ஓட்டை, உடைசல் படகை இப்பகுதி வசதிக்காக வழங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயர் மட்ட பாலப்பணிகளை விரைவில் துவக்கி தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.