குறிப்பிட்ட வீடுகளை நோட்டமிட்டு பகலில் ஆட்கள் இல்லாத வீட்டில் நுழைவதும், பின்னர் சில பொருட்களை வெளியே எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
கோவை: கோவை மசக்காளிபாளையம் பகுதியில் குறிவைத்து வீடுகளுக்குள் நுழையும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை ஹோப் காலேஜ் பகுதி மசக்காளிபாளையம் சாலையில் லால்பகதூர் நகர் உள்ளது. இதில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த சாலையில் எந்நேரமும் அதிகமான போக்குவரத்து உள்ளது.
இந்நிலையில், கடந்த 3 மாதமாக அப்பகுதிக்கு TN37 CX4262 என்ற எண் கொண்ட வெள்ளை நிற இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை பாலன் நகர் அருகே உள்ள ரிலையன்ஸ் கடை முன்பு நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டுக் கொண்டு தனியார் தங்கும் விடுதியை ஒட்டியுள்ள காம்பவுண்டுக்குள் நுழைவதும், பின்னர் ஒரு மணிநேரம் கழித்து வெளியே சென்றுள்ளார்.
இவ்வாறு கடந்த மூன்று மாதங்களாக இந்த நபர் தனது வாகனத்தை பல இடங்களில் நிறுத்திவிட்டு சில குறிப்பிட்ட வீடுகளை நோட்டமிட்டு பகலில் ஆட்கள் இல்லாத வீட்டில் நுழைவதும், பின்னர் சில பொருட்களை வெளியே எடுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நபர் தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாட்கள் இரவு நேரங்களிலும் அப்பகுதியில் நடமாடி உள்ளார். பின்னர் தனியார் தங்கும் விடுதியை ஒட்டியுள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின், அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுபோன்று லால் பகதூர் நகரில் மசக்காளிபாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள சில வீடுகளை குறிவைத்து இந்த நபர் அடிக்கடி நுழையும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் இங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், இப்பகுதியில் மூன்று மாதங்களாக குறிப்பிட்ட வீடுகளை குறிவைத்து வீட்டுக்குள் நுழையும் இந்த மர்ம நபர் தொடர்பான வீடியோ பதிவுகளை கொண்டு மாநகர காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல் ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் இங்குள்ள கரூர் வைசியா ஏடிஎம் அறைக்குள் சென்று 7 பேட்டரிகளை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.