நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவி சங்கவிக்கு லேப்டாப் வழங்கியுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.
கோவை: மலசர் பழங்குடியினர் வசிக்கும் (நன்ஞப்பனூர்) குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ரொட்டிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த மலசர் பழங்குடி மாணவி சங்கவி, நீட் தேர்வில் 202 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார்.
மலசர் பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்தவர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெறுவது முதல்முறை என்பதால், மாணவி சங்கவியை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.
மாணவியின் பழங்குடியின குடியிருப்பிற்கு நேரில் சென்று வாழ்த்திய அவர், மாணவிக்கு பரிசாக மடிக்கணினியை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவியைச் சந்திக்க வந்ததாகவும், மேலும் இந்த பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால் ஒரு சமூகமே முன்னேற்றம் அடையும் என தந்தை பெரியார் தெரிவித்துள்ளார், அது போல் இந்த பழங்குடி மாணவி படித்து மருத்துவராக வேண்டும் என முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்.
அவரை ஊக்கப்படுத்தவும், பிற பழங்குடி மாணவ-மாணவிகளுக்கு இவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரில் சந்தித்து வாழ்த்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மாணவி சங்கவியின் கல்விக்கு தேவையான உதவிகளை துறை சார்ந்தும், தனிப்பட்ட முறையிலும் செய்வதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
படிப்பதற்கு உதவும் வகையில் லேப்டாப் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். பழங்குடி மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் எனவும், அவர்களுக்குக் கல்வி கொடுத்தாலே அவர்களுக்கு தேவையானதை அவர்களால் பெற முடியும் என தெரிவித்த அவர், இந்த குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், பழங்குடி மாணவர்களுக்கு எளிதில் சாதி சான்றிதழ் கிடைக்க கயல்விழி எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
இதே போல நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த பழங்குடி மாணவி சங்கவிக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் ஸ்மார்ட் போன் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.