அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பரிந்துரையை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து மனு அளித்தனர்.
கோவை: கோவை அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பரிந்துரையை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் மனு அளித்தனர்.
இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு தங்கள் மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் அளித்தனர்.
கோவையை அடுத்த அன்னூர் பகுதியில், தொழிற்பேட்டை அமைக்க 4 வருவாய் கிராமங்கள் மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1504 ஹெக்டேர் நிலத்தை தமிழ்நாடு நில கையகப்படுத்துதல் சட்டம் 1997 ன் கீழ் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க, மாவட்ட ஆட்சியர் வாயிலாக, TIDCO வின் முதன்மை இயக்குநர் தமிழக அரசிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில் அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் கால்களில் விழுந்து விவசாயிகள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இந்த மனுவில், அன்னூர் சுற்று வட்டார குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 50,000 மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. இங்கு நடைபெறும் விவசாய பணிகளை நம்பியே விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், எங்களின் 70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் , விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கான முயற்சி எங்களை சோர்வடையச் செய்துள்ளது.
அதேபோல, விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டது.
மேலும், கடந்த 02.10.2021ல் ஜனநாயக வழியில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி இப்பொருள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையிலும் எந்த முறையான அரசு அறிவிப்பும் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
எனவே, விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது, தொழிற்பேட்டை திட்டம் ரத்து, என்ற சட்ட பூர்வ அறிவிப்பு அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டி, கேட்டு கொள்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் மனு அளித்தனர்.
