ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 37-ஆயிரத்தை கடந்தது: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதே காரணம் என வல்லுனர்கள் கருத்து.
கோவை: ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 37-ஆயிரத்தை கடந்தது: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதே காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரலாறு காணாத அளவு அதிகரிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாயைக் கடந்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை சிறிது குறையத் துவங்கி ஒரு சவரன் 36-ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
விலை குறைப்பு குறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகை வாங்க முயற்சி மேற்கொள்வதற்கு முன்னதாக மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கத் துவங்கி விடுகிறது. தொடர் முகூர்த்த நாட்கள் காரணமாகச் செப்டம்பர் மாதம் தினமும் 60-கோடி ரூபாய்க்கு கோவையில் தங்க நகை வணிகம் நடைபெற்றது.
தற்போது அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக அதிகரித்து ஒரு சவரன் 37-ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. விலை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்து மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், "தங்கத்தின் விலை ஒரு சவரன் தற்போது 37-ஆயிரம் ரூபாயைக் கடந்து உள்ளதற்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதே முக்கிய காரணமாகும்.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். கோவையைப் பொருத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்புதான் தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் அபரிமிதமான விலை உயர்வு எதிர்வரும் நாட்களில் தங்க நகை வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்றார்.
கோவை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட ஒரு சவரன்(8 கிராம்) தங்கத்தின் விலை விவரப்பட்டியல்,
October 19: Rs 36,720
October 20: Rs 36,656
October 21: Rs 36,768
October 23: Rs 36,976
October 24: மார்க்கெட் விடுமுறை
October 25: Rs 37,104