என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை என்று மனநிலை பாதிக்கபட்ட சாந்தி போலீசில் வாக்குமூலம். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைப்பு.
கோவை: கோவையில் மூன்று மாதமேயான இரட்டை பேரக்குழந்தைகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, ஆண் குழந்தையை கொடூர முறையில் கொன்று விட்டு, பெண் குழந்தையை தாக்கிவிட்டு தப்பிய பாட்டியை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி 3 வது குறுக்குத் தெருவில் குடியிருந்து வருபவர் பாஸ்கரன் - ஐஸ்வரியா தம்பதி. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரியன் என்ற ஆண் மற்றும் ஆரிகா ஸ்ரீ என்ற பெண் என இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
மதுரையில் இருந்த இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் கோவைக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தைகளைபார்த்து கொள்வதற்காக, மதுரையில் இருந்து ஐஸ்வரியாவின் தாயார் சாந்தியையும் உடன் அழைத்து வந்துள்ளனர். கடந்த 2 மாதமாக சாந்தி, இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வரியா மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது, சாந்தி குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளர். இதனால், அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் தேடியபோது ஆண் குழந்தை படுக்கையில் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளது. பெண் குழந்தையை தேடியபோது, அந்த குழந்தை வீட்டில் உள்ள கழிப்பறைக்குள் அமுக்கு துணியை வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாயார் ஐஷ்வர்யா, சம்பவம் குறித்து தனது கணவர் பஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக தம்பதிகள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில், குழந்தையை கொன்ற சாந்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பேரக்குழந்தையை கொன்றுவிட்டு பேத்தியை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடிய பாட்டி சாந்திக்கு, பல ஆண்டுகளாக மன ரீதியான பாதிப்பு இருந்து உள்ளது என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தப்பி ஓடிய சாந்தியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட சாந்தியின் கணவர் மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதால், தனிப்படை போலீசார், கோவை மற்றும் மதுரை பகுதியில் சாந்தியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் சாந்தி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் அவரை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, துடியலூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்த போது, அன்று எனது மகள் மருந்து கடைக்கு சென்றது வரை மட்டுமே தனக்கு ஞாபகம் இருப்பதாகவும், அதன் பிறகு எனது மகள் வந்து என்னை அடித்ததிற்கு பிறகே மறுபடியும் ஞாபகம் வந்ததாகவும், இடையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்று வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.