கடந்த முறை குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே நவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனைவருடனும் ஒன்றுகூடிக் கொண்டாடியது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், புதிய அனுபவத்தையும், மன நிறைவையும் கொடுப்பதாக கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவையில் வீடுகளில் களைக்கட்டிய நவராத்திரி விழாவில், நவதானியங்கள், முககவசத்துடன் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டது.
நவராத்திரி என்பது இந்துக்களின் கடவுளான லட்சுமி ஒன்பது நாட்கள் விரதமிருந்து அசுரனை வதம் செய்ததைக் குறிக்கும் நாளாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் ஒவ்வொரு வீடுகளிலும் கோயில்களிலும் பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒன்பது நாட்களும் புதுப்புது விதமான உணவுகள் சமைத்து இறைவனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாகக் களையிழந்த நவராத்திரி விழா இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைவு காரணமாக களைக்கட்டத் துவங்கியுள்ளது.
கோவையில் குறிப்பாக வீடுகளில் கொலு வைத்து உற்றார் உறவினர்களுடன் நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
கோவை இடையபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
இதில் நவதானியங்களுடன் கடவுள் சிலைகள், குபேர சிலைகள், உழவு, விளையாட்டு என அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைச் சித்தரிக்கும் பொம்மைகளும், இந்து சமய புராணங்களைச் சித்தரிக்கும் பொம்மைகள், தேரோட்டம், கடவுளர்களின் ஊர்வலம், அணிவகுப்பு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முககவசங்களுடன் பள்ளியில் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பது போன்றும், திருமண நிகழ்ச்சிகளில் முககவசம் அணிந்தும் சமுக இடைவெளிவிட்டு இருப்பது, திருமண வைபவத்தில் முககவசம் அணிந்திருப்பது போன்ற கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சிறிய அளவிலான சமையலறை சொப்பு சாமான்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் பறவைகள் பொம்மைகள், ஆதிவாசி மக்கள் உள்ளிட்ட பொம்மைகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் சிறுவர் சிறுமியர்கள் முதல் பெண்கள் முதியவர்கள் எனப் பஜனை பாடல்களைப் பாடினர்.
கடந்த முறை குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே நவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அனைவருடனும் ஒன்றுகூடிக் கொண்டாடியது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொலு பொம்மைகளாக வைத்திருப்பது புதிய அனுபவத்தையும் மன நிறைவையும் கொடுப்பதாகக் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களைப் பகிர்ந்துகொண்டனர்.