நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள கோவை மக்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நல திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கோவை: தமிழகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் உத்தரவின்படி, மீண்டும் தமிழகம் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தின் படி பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்.ஆர். நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு பணிகளான பூங்கா உள்ளிட்ட வசதிகள், நீர்நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மேம்பாடு, மரக்கன்று நடுதல், நவீன தெரு விளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள், மின்மயானங்கள் அமைத்தல், சாலைகள், சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளவிருக்கிறது.
எனவே நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள கோவை மக்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நல திட்டத்தைத் தோ்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் அல்லது மாநகரப் பொறியாளரிடம் வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை அறிய மாநகரப் பொறியாளரை நேரில் சந்திக்கலாம்.
இல்லாவிடில் 8190000200 என்ற தொலைபேசி எண்ணிற்கு அல்லது [email protected] என்ற இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்துக்கொள்ளலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.