வெள்ளலூர் ஏ.டி.எம் கொள்ளை முயற்சி குறித்து தெற்கு காவல் உதவி ஆணையாளர் வின்செண்ட் மற்றும் போத்தனுர் போலீசார் தீவிர விசாரணை.
கோவை: சமீபகாலமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணிகள் தீவிரப்படுத்த போதிலும், இந்த திருட்டு சம்பவங்கள் குறைந்தபாடு இல்லை.
கோவை வெள்ளலூர் சித்தி விநாயகர் கோவில் அருகில் செயல்பட்டு வரும் கனரா வங்கி அருகிலேயே வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
இன்று அதிகாலையில், இந்த ஏ.டி.எம்.மையத்தில் உள்ள எந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏ.டி.எம்.மையத்தில் இருந்து வந்த சத்தத்தை தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் வின்செண்ட் மற்றும் போத்தனுர் போலீசார் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஏ.டி.எம்.மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்ப்ரே அடித்தும், ஏ.டி.எம். மையத்திற்குள் மிளகாய்ப்பொடி தூவியும் சென்றுள்ளனர். கொள்ளையர்களின் இந்த செயல் காவல்துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க ஏ.டி.எம்.மையம் இருந்த இடத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவையில் சமீபகாலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை முயற்சி அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனபதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.