சமூக நீதியே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூக நீதி நாளில் உறுதி ஏற்கின்றேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கோவை: தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரது 143வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழக அரசு பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சமூக நீதி நாள் உறுதி ஏற்பு வாசகங்களை வாசிக்க, கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன் என்றும் மானுட பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும் எனவும் சமூக நீதியே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூக நீதி நாளில் உறுதி ஏற்கின்றேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
