மருத்துவ கழிவுகளை குளம், ஆற்றங்கரையில் கொட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: கோவை நொய்யலாற்று பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை தனியாக எரியூட்ட மையம் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் அமைப்புகள் மருத்துவ கழிவுகளை சேகரித்து எரியூட்டும் பணியினை தனியார் மருத்துவமனைகளிடம் கட்டணம் பெற்று செய்து வருகின்றனர்.
ஆனால், ஒரு சில சிறிய தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் அவற்றை குளக்கரைகளிலும், ஆற்றின் ஓரங்களிலும் கொட்டுவது தொடர் கதையாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலையில், கோவை புட்டுவிக்கி பாலம் அருகில் நொய்யல் ஆறு செல்லும் வழியில் சாலையோரத்தில் ஏராளமான ஊசிகள் மற்றும் மருந்து குப்பிகள் போன்ற மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.
சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு இருக்கும் அந்த மருத்துவ கழிவுகளை அகற்றவும், மருத்துவ கழிவுகளை குளம், ஆற்றங்கரையில் கொட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா பரவல் என்பது அதிகரித்துள்ள நிலையில் சாலையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் உண்ணக்கூடும். இதனால் பல்வேறு நோய்கள் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.