கோவை: பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்கப்படுவதையடுத்து கல்வி நிலையங்களில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை: பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்கப்படுவதையடுத்து கல்வி நிலையங்களில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவையில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலையின்போது தினசரி பாதிப்பு 4- ஆயிரத்தை கடந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதையடுத்து பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதையடுத்து, தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை அகற்றுவது இல்லை என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் உட்கட்டமைப்பு வசதிகள் அப்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:-
கோவையில் அரசு கலைக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி இந்த மையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது.
புதிதாக கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படமாட்டார்கள். தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கொடிசியா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
கல்வி நிலையங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் அகற்றப்படாது, அப்படியே இருக்கும். மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தால் இந்த மையங்கள் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் இந்த மையங்கள் அனைத்தும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.