கோவை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மருமகன் 7 கோடி ஏமாற்றிவிட்டு குழந்தை பிறந்தவுடன் கொலை மிரட்டல் விடுப்பதாக டி.ஜி.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவையில் ரூ.7 கோடி ஏமாற்றிவிட்டு குழந்தை பிறந்தவுடன் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் வால்பாறை தொகுதி காங்கிரஸ் மற்றும் தாமக எம்.எல்.ஏ கோவை தங்கம். இவருடைய மருமகன் அருண் பிரகாஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கோவையில் ஹாட் சாக்லேட் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் சிந்துஜா என்ற பெண் தொழில் அதிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. திருமணம் செய்துகொள்வதாக அருண் பிரகாஷ் நம்பிக்கையளித்த நிலையில், இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், நம்பிக்கை அளித்தபடி திருமணம் செய்யாமல், சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு அருண்பிரகாஷ் மோசடி செய்து விட்டதாக, டிஜிபி அலுவலகத்தில் சிந்துஜா புகாரளித்துள்ளார். தன்னையும் தனது குழந்தையும் கைவிட்ட அருண் பிரகாஷ், கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி வருவதாகவும், சிந்துஜா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, கோவை புலியகுளம் மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அருண் பிரகாஷை விசாரணை செய்ததில் 65 லட்சம் ரூபாய் மட்டுமே தருவதாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிந்துஜா சென்னை டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று, சில நாட்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் முழு ஆதாரத்துடன் மனு கொடுத்துவிட்டு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரிடம் தகவல் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த அரசாங்கத்தையும் காவல்துறையும் நம்பியிருக்கிறேன். கோவையில் மகளிர் நிலையத்தில் என்னிடம் பேரம் பேசி சமாதானம் செய்ய முற்பட்டார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.