கோவை: திமுக அரசினுடைய பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் குனியமுத்தூர் பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: திமுக அரசினுடைய பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் குனியமுத்தூர் பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு தேர்தல் நேரங்களில், நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மக்களிடத்தில் வாக்கு சேகரித்தது. குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், எதையுமே இதுவரை செய்யாமல், தனது மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதை கண்டித்து கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் பகுதியில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன முழங்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறுகையில்,
திமுக அரசு ஆட்சியில் அமர்ந்தும் பல்வேறு பல திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் எதையும் செயல்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
அதேபோல, அறிவித்த திட்டங்களை கண்டுகொள்ளாத அரசாக திமுக அரசு இருக்கின்றது எனவும், தேர்தல் நேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை எடுக்காமல் இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மேகதாதுவில் அணை கட்டிவதை தடுப்பது போன்ற எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும், எதைப் பற்றியும் கவலைப்படாத அரசாக இந்த அரசு இருக்கின்றது எனவும், கொரோனா தொற்று தடுப்பில் கவனம் செலுத்தவில்லை என்றார்.
திமுக அரசு வந்த பின்பு ஒவ்வொரு ஊரிலும் 50 பேர் முதல் 60 பேர் இறந்திருக்கின்றனர் என்று தெரிவித்த அவர், அதிமுக அரசு கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்காக சிறப்பாக, கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டது எனவும் தற்போது கூட ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக டெல்லியில் பாரத பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பொய் வழக்கு போடுவது, காவல் துறை மூலம் மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த அரசு ஈடுபடுகின்றது என்று குற்றம்சாட்டிய அவர், காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றார்.
காவல்துறை மிரட்டலுக்கு அதிமுகவினர் பயப்பட மாட்டோம் என்று தெரிவித்த அவர், என்ன வழக்கு வேண்டுமானாலும் போடலாம், 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவைக்கு கொண்டு வந்தது அதிமுக அரசுதான் என்பதை யாரும் மறைக்க முடியாது என்று கூறினார்.
மேலும், கோவைக்கு நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து இருக்கின்றார்கள் எனவும், மக்களுக்காக நாங்கள் கொண்டு வந்ததை செய்ய முடியாமல் கையாலாகாத அரசாக, இந்த அரசு இருக்கின்றது எனவும், அதிமுக தொண்டர்கள் யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டார்கள் எனவும் காவல் துறை எப்பொழுதும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று காவல்துறையினர் மீது காட்டமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தபடி விடைபெற்றுச் சென்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதனகோபால், அவைத்தலைவர் உசேன், ஜெகன், வடிவேல், பாஸ்கர், புல்கான் பாப்பனன், ஜெகதீஷ், நாராயணன், முருகேஸ்வரி, சித்திரைச்செல்வன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.