கோவை: நூல் உற்பத்தி செலவில் 60 சதவீத பங்கு வகிக்கும் பருத்தியின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால் பருத்தியை மையமாக கொண்டு இயங்கும் இந்தியப் பருத்தி ஜவுளித் தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.
கோவை: நூல் உற்பத்தி செலவில் 60 சதவீத பங்கு வகிக்கும் பருத்தியின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால் பருத்தியை மையமாக கொண்டு இயங்கும் இந்தியப் பருத்தி ஜவுளித் தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் நடைமுறைக்கு வந்த முழு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பு நாளடைவில் குறைந்து ஐவுளிப் பொருட்களுக்கான தேவை விரைந்து உள்நாட்டு சந்தையிலும், பன்னாட்டுச் சந்தையிலும் அதிகரித்ததால் நிலைமை சீரடைந்து அதிலிருந்து ஜவுளித்தொழில் மீள முடிந்தது.
இருப்பினும், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, ஜவுளித்தொழிலின் உள்நாட்டு சந்தையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஊரடங்கு, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அதிக போக்குவரத்து செலவு ஆகியவற்றின் காரணமாக ஆடை மற்றும் வீட்டு உபயோக ஐவுளி ஏற்றுமதி செய்யும் ஜவுளி நிறுவனங்களால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஆர்டர்களை செயல்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இச்சூழலில், கடந்த 15 நாட்களில் 355 கிலோ எடை கொண்ட கண்டி ஒன்றின் விலையை இந்தியப் பருத்தி கழகம் ரூ.3800 அளவிற்கு உயர்த்தியது மற்றும் 2021-22ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் பருத்தி மீதான இறக்குமதிக்கு 10 சதவீதம் வரி விதித்தது போன்றவைகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு பருத்தி வியாபாரிகள், குறிப்பாகப் பன்னாட்டு வியாபாரிகள், பருத்தியை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இது போன்ற பருத்தி விலையேற்றம், ஒட்டு மொத்த ஜவுளித் தொழிலுக்கும் பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன், 2021 ஜனவரி மாதம் முதல் பருத்தியின் மாதத்தில் விண்ணைத் தொட்டுள்ளது.
மேலும், இந்திய பருத்திக் கழகம் 355 கிலோ கொண்ட கண்டி ஒன்றுக்கான விலையை ஜீலை துவக்கத்தில் ரூ.51,000ல் இருந்து தற்போது ரூ.54,800 ஆக உயர்த்தியுள்ளது. அதீத விலையேற்றத்திற்கான முக்கிய காரணியாக மாறியுள்ளது, என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் விளையும் சங்கர்-6 வகை பருத்தியின் சந்தை விலை, ஜனவரி 2021ல் கண்டி ஒன்றுக்கு ரூ.43,220 என்று இருந்தது, தற்போது 30 சதவீதம் அதிகரித்து ரூ.56,600 ஆக உள்ளது என்று சைமா தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலையுயர்வானது ஜவுளித் தொழிற்துறையினரையும், அவர்களின் இலாபத்தையும் பிழிவதோடு மட்டுமன்றி ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்துள்ள சாதாரண பொதுமக்களையும் மிகவும் பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பருத்தி விலை உயர்வோடு ஒப்பிடுகையில், நூல் விலை உயர்வில் ஒரு சமதளமற்ற நிலைமை உள்ளது என்றும், இதன் காரணமாக வருங்காலங்களில் நஷ்டத்தைச் சரிக்கட்ட நூல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குப் பஞ்சாலைகள் தள்ளப்படும் என்றும் சைமா தலைவர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில், இந்திய பருத்திக் கழகம் நாட்டில் விளைந்த பருத்தி உற்பத்தியில் 25 சதவீதத்தை வாங்கியது. அதன் விலை கண்டி ஒன்றுக்கு விலை ரூ.43,000 ஆகும்.
ஆனால், இந்திய பருத்திக் கழகம் அதே பருத்தியை அதிக விலைக்கு விற்று வருகிறது. இதர செலவினங்கள் மற்றும் நியாயமான இலாபம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், அதிகபட்சமாகக் கண்டி ஒன்றுக்கு ரூ.48,000க்கு விற்றால் பருத்தி விலையில் ஒரு ஸ்திரத்தன்மை நிலவும் என்று அஷ்வின் தெரிவித்தார்.
பருத்தியை வாங்குவதற்கு இந்திய பருத்தி கழகம் தனது சேமிப்பு கிடங்கில் வைத்து பஞ்சாலைகளுக்கு வழங்க மூன்று மாத கால அவகாசம் கொடுத்த போதிலும், அதன் பலனை பெரும்பாலான பஞ்சாலைகள் அடைய முடிவதில்லை. அதற்கு நிதிநிலைமை மற்றும் விலையில் நிச்சயமற்ற தன்மை போன்றவையே காரணங்களாகும்.
ஆனால் பன்னாட்டுப் பருத்தி வியாபாரிகள் மிக குறைந்த வட்டியில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பெரும்பகுதி பருத்தியை வாங்கி விலையேற்றத்திற்கு வித்திடுகின்றனர் என்று சைமா தலைவர் தெரிவித்தார்.
இறக்குமதி பருத்தி மீது விதிக்கப்பட்ட 10 சதவீத வரியினால், பருத்தி வியாபாரிகள் ஊக வணிகத்தை உற்சாகப்படுத்திக் கூடுதல் நீண்ட இழை பருத்தி போன்ற சில பருத்தி வகைகளின் விலைகளை உயர்த்தியதால், உள்நாட்டுப் பருத்தியின் விலை பன்னாட்டுப் பருத்தியின் விலையைக் காட்டிலும் அதிகமாகி, நமது ஜவுளித் தொழில்துறையினரின் போட்டியிடும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சைமா தலைவர் தெரிவித்துள்ளார்.
பருத்தி சீசன் அல்லாத (ஜுலை முதல் செப்டம்பர் வரை) காலத்தில் பருத்தியை இறக்குமதி செய்து நூல் விலையில் ஒரு நிலையான தன்மையை ஏற்படுத்தப் பஞ்சாலைகளுக்கு இருந்த வாய்ப்பு, தற்போது 10 சதவீத இறக்குமதி வரியினால் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பருத்தி கையிருப்பு 110 முதல் 120 இலட்சம் பேல்கள் என்று இருந்த நிலையிலும், இது போன்ற விலை உயர்வை ஜவுளித்துறையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஊக வணிகத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, ஜின்னிங் ஆலைகள் மற்றும் வியாபாரிகள் நல்ல பருத்தியுடன் தரம் குறைந்த பருத்தி மற்றும் கழிவு பருத்தியைக் கலந்து விற்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சிறு, நடுத்தர, குறு நூற்பாலைகள், விசைத்தறியாளர்கள் மற்றும் கைத்தறி துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக சைமா தலைவர் தெரிவித்துள்ளார்.
பருத்தி விளைச்சல் மற்றும் நுகர்வு ஆகியவற்றுக்கான கமிட்டி தனது ஏப்ரல் 30ம் தேதி நடந்த கூட்டத்தில், பஞ்சாலைகளின் நுகர்வு 288 இலட்சம் பேல்கள் எனவும், கையிருப்பு 119 இலட்சம் பேல்கள் என்றும் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை முடிவுக்கு வந்த போது தீர்மானித்திருந்த போதிலும், தொற்றின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் 30 நாட்களுக்கு மேலாக உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டதன் காரணமாக, பருத்தி நுகர்வு 15 முதல் 20 இலட்சம் பேல்கள் வரை குறையும் என்று சைமா தலைவர் கூறியுள்ளார்.
ஆகையினால், பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக நீக்கி ஒட்டு மொத்த ஜவுளித் தொழிலுக்கு மேலும் சேதம் ஏற்படாதவாறு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று சைமா தலைவர் அஷ்வின் சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆண்டிற்கு இறக்குமதி 11 முதல் 12 இலட்சம் பேல்கள் அளவிலே உள்ளதால், அதாவது உற்பத்தியில் 4 சதவீதத்திற்கும் கீழே, அதுவும் இந்தியாவில் விளையாத பருத்தி வகைகள் என்பதால், இம்மாதிரி பருத்திகளை இறக்குமதி செய்வதன் மூலம் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதுடன், இறக்குமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு உதவாது, அதே நேரத்தில் அது ஜவுளித்தொழிலுக்கு மிகுந்த பின்னடைவாக இருக்கும் என்றும் சைமா தலைவர் தெரிவித்தார்.