கோவை: காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து கோவையில் விவசாயிகள் ஏர்கலப்பைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து கோவையில் விவசாயிகள் ஏர்கலப்பைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு காவிரியாற்றின் குறுக்கே ரூ.9000 கோடி மதிப்பில் மேகதாது பகுதியில் அணைகட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதரத்தையும் தமிழக உரிமையை பறிக்கும் விதமாக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், விவசாயிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக அரசு அணைகட்டுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளதை கண்டித்தும், இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக விவசாயிகள் இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் ஏர்கலப்பைகளுடன் மத்திய மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மேலும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாக கர்நாடக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், மத்திய அரசு மேகதாது விவகாரத்தில் தலையிட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேகதாது அணை விவகாரம் தமிழக விவசாயிகளை கொதிப்படைய செய்துள்ள நிலையில் அணை கட்டுவதை கர்நாடக அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.