கோவை: கோவை முத்தண்ணன் குளத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை முத்தண்ணன் குளத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் இருந்த பழமைவாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் இடித்துத் தகர்க்கப்பட்டது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருவதுடன், தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அங்காளம்மன் படத்தை வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் தடாகம் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அர்ஜுன் சம்பத், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தாங்கள் வரவேற்பதாகவும், அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். ஆனால், அதற்காக பழமை வாய்ந்த இக்கோவிலை இடித்ததால் தங்களது ஆன்மீக நோக்கம் புண்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும், இடிக்கப்பட்ட கோவில் அமைந்திருந்த இடத்தில் சிறு அளவிலாவது மீண்டும் கோவிலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் காலம் காலமாக வணங்கி வந்த இக்கோவில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த பலரும் கவலையில் ஆழ்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.