கோவை: கோவை சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் மது போதையில் இளைஞர்கள் இறங்கி சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் மது போதையில் இளைஞர்கள் இறங்கி சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை குற்றலாம் மற்றும் சித்திரை சாவடி தடுப்பணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சித்திரை சாவடி தடுப்பணையில் மது போதையில் இறங்கும் சில இளைஞர்கள் அதில் சாகசம் செய்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரின் வேகம் அதிகரித்துள்ள போதும், ஆபத்தை உணராமல் மது போதையில் இரண்டு இளைஞர்கள் சாகசம் செய்த போது ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். மற்றொரு இளைஞர் அவரை இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.
இதேபோல், மது போதையில் இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான சாகசங்களை செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, உடனடியாக அங்கு காவல் துறையினர் அல்லது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வெள்ளப்பெருக்கு நேரத்தில், தடுப்பணை நீர் பாதையில் இறங்குவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.