கோவை: தமிழகத்தில் வளர்ச்சித்திட்டங்களுக்காக கோயில்களை இடிக்க வேண்டும் என்றால் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: தமிழகத்தில் வளர்ச்சித்திட்டங்களுக்காக கோயில்களை இடிக்க வேண்டும் என்றால் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் கோயில்களில் இடிக்கப்படுவது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பேரூராதினம் சாந்தலிங்க அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வாராஹி பீடம் மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இதில் பேசிய அவர்கள், ‘‘1993-ல் சுதந்திரத்திற்கு முன் கட்டபட்ட கோயில்களை அப்புறப்படுத்தக் கூடாது என்ற சட்டத்தை இயற்றி உள்ளனர். ஆனால், அதற்கு மாறாக 100 ஆண்டு கால பழைமை வாய்ந்த கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன'' என்று தெரிவித்தனர். மேலும், ‘‘குளக்கரைகளில் கோயில்கள் இருப்பது குளங்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். ஆனால், கோவை உட்பட பல்வேறு இடங்களில் வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரால் அவற்றை அகற்றி உள்ளார்கள்'' என்று தெரிவித்தனர். மேலும், ‘‘இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் இனிமேலும் ஏதேனும் கோயில்கள் இடிக்கப்படுமேயானால் அப்பகுதிகளில் உள்ள ஆதினங்கள் மற்றும் துறவிகளை ஆலோசித்து கோயிலை அப்புறப்படுத்த வேண்டும்'' என்றனர். அதேசமயம், சமாதிகளை எக்காரணம் கொண்டும் இடிக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர்.
கோயில்கள் கட்டாயமாக இடிக்கப்பட வேண்டும் என்றால் வேறு ஒரு இடம் அமைத்து அங்கு கோயில் கட்டியதன் பின்புதான் இந்தக் கோயிலை இடிக்க வேண்டும் என்ற 2005ல் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சில இடங்களில் கோயில் நிலங்களில் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் ஆகியவை இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர்கள், மதுரை உயர் நீதிமன்றமே குளக்கரையில் தான் உள்ளது என்றும் அதை எடுப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பினர். கோயில்கள் இடிக்கப்படும் பொழுதும் சாமி சிலைகள் உடையும் பொழுதும் மன வேதனை அளிப்பதாகவும் கூறினர். இது முதலமைச்சரின் பார்வைக்கு சென்றதா என்று கூட தெரியவில்லை. அவருக்கு சென்றிருந்தால் கூட சிறிது காலம் பொறுங்கள் என்று கூறியிருப்பார் எனக்கூறிய அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் குலதெய்வம் கூட அங்காளம்மன்தான் எனவும் அதனை இடித்தால் அவர் ஏற்றுக்கொண்டிருப்பாரா என்றும் கேள்வி எழுப்பினர். கோயில்கள் இடிக்கப்படுவது அரசுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை பயக்காது என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் கூறினர்.