கோவை: தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்று மத்திய அரசிற்கு காலி சிரஞ்சுகளை அனுப்பி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர்.
கோவை: தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்று மத்திய அரசிற்கு காலி சிரஞ்சுகளை அனுப்பி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழகத்திற்கு மத்திய அரசு தடுப்பூசிகளை போதிய அளவிற்கு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பல்வேறு இடங்களில் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காலி சிரஞ்சுகளை மத்திய அரசுக்கு அனுப்பி தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிய நிலையில், மூன்றாவது அலை வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசிகளை தமிழகத்திற்கு மோடி அரசு போதுமான அளவிற்கு வழங்காமல் வஞ்சகம் செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
தமிழகத்தை விட சிறிய மாநிலங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி ஆலையை திறப்பதற்கும் அனுமதி மறுத்து வருவதாக தெரிவித்தார்.
இதனால் தடுப்பூசி செலுத்தும் நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்காக நள்ளிரவு முதல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்தும் விழிப்புணர்வு, தமிழகத்தில் அதிகம் உள்ளது என்பதால் இனிமேலாவது மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல் போதுமான அளவிற்கு தடுப்பூசிகளை ஒதுக்கித் தர வேண்டும் என தெரிவித்தார்.