கோவை: தமிழகத்தில் இயங்கிவரும் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியான ஊதிய உயர்வு மற்றும் உள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பது குறித்து கோவை மில் ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.
கோவை: தமிழகத்தில் இயங்கிவரும் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியான ஊதிய உயர்வு மற்றும் உள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பது குறித்து கோவை மில் ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழக பஞ்சாலைத் தொழிலாளர் மத்திய சங்க கூட்டு நடவடிக்கைக் குழு மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆறுமுகம் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘‘வணக்கம். தமிழகத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களின் தொழில் ரீதியான ஊதிய உயர்வு, பஞ்சப்படி புள்ளி உயர்வு 1974, 1979, 1985, 1993 ஆகிய ஆண்டுகளில் உடன்பாடு ஏற்பட்டு, ஊதிய உயர்வு, பஞ்சப்படி புள்ளி உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன.
1993 டிசம்பரில் ஏற்பட்ட உடன்பாடு 1998-ல் முடிவடைந்தது. மாநிலத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர் மத்திய சங்கங்கள் சார்பில் புதிய தொழில் ரீதியான ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகள முன்வைக்கப்பட்டு 2001ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அன்றைய தொழிலாளர்துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு (டி) எண். 689 தேதி 13.09.2001 ன் படி ஊதிய உயர்வு, பஞ்சப்படி உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தனித் தொழில் தீர்ப்பாய விசாரணைக்கு அனுப்பி ஆணை பிறப்பித்தது.
தமிழ்நாடு அரசு அரசாணை எண்(டி) 690 தேதி 13.09.2001-ன் படி தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஊதிய உயர்வு ரூ.225/- மாதம் ஒன்றுக்கும் (கதிர்கள் 2201-க்கு மேல் உள்ள ஆலைகளுக்கு) ரூ.150/- மாதம் ஒன்றுக்கு 2200 கதிர்கள் வரை உள்ள ஆலைகளுக்கு வழங்க வேண்டும் எனவும், மொத்த தொகை ரூ.1300/- மற்றும் ரூ.900/- வழங்க ஆணையிட்டது. அரசின் ஆணையை பஞ்சாலை நிர்வாகங்கள் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் சென்றார்கள். 19.07.2010-ல் சென்னை உயர் நீதிமன்றம் மேற்படி அரசாணைகள் செல்லும் என உத்தரவிட்டது.
தனித்தொழில் தீர்ப்பாயம் முன்பும் எந்த முடிவும் ஏற்படவில்லை. சென்னை தொழிலாளர் தீர்வானையம் முன்பும் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. சுமார் 23 ஆண்டுகளாக தமிழக பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு எந்தவித ஊதிய உயர்வும், பஞ்சப்படி மற்றும் எந்த உயர்வுகளும் இன்றி பணிபுரிந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இயங்கி வரும் தேசிய பஞ்சாலைக் கழகம் நடத்தி வரும் 7 ஆலைகளுக்கு இரண்டு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு சம்பளம் பெற்று வருகிறார்கள். அதே போல் தமிழ்நாடு அரசு நடத்திவரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளுக்கும் மூன்று ஒப்பந்தங்கள் ஏற்பட்டு ஊதிய உயர்வு, பஞ்சப்படி உயர்வு பெற்று வருகிறார்கள். தனியார் ஆலைத் தொழிலாளர்களுக்கு 23 ஆண்டுகாலமாக எந்த ஊதிய உயர்வும் இன்றி பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது பஞ்சாலைகளில் நிலவி வரும் சூழல் பற்றி...
2001ம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட காலத்தில் பஞ்சகம் முதலாளிகள் கட்டாய ஓய்வு திட்டத்தின் மூலமாகவும், தானாக ஓய்வு பெறும் திட்டத்தின் மூலமாகவும், புதிய ஜவுளிக் கொள்கை, Exit Policy போன்றவைகளினால் நிரந்தரத் தொழிலாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, தொழிலாளர்களின் நலச் சட்டங்களை எதையும் அமல்படுத்தாமல் ஆலையை இயக்கி வருகிறார்கள்.
1. எந்தவொரு தனியார் ஆலைகளிலும் நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை.
2. மாங்கல்யத் திட்டம், திருமண உதவித்திட்டம், கேம்ப் கூலி முறை, ஒப்பந்தத் தொழிலாளர்கள், கேஷிவல் தொழிலாளர்கள், அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் என்ற பெயரில் அத்தக் கூலிகளாக வேலை வாங்கிவருகிறார்கள்.
தென் மாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் ஏஜெண்டுகள் மூலமாக வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள இளம் பெண்கள், சிறார்களை அழைத்து வந்து ஆலை வளாகத்திற்குள்ளேயே அடைத்து வைத்து சிறைக் கைதிகளைப்போல குறைந்த கூலியைக் கொடுத்து வேலை நேரம் கணக்கில்லாமல் வேலைக்கு அமர்த்தி ஆலையை இயக்கி வருகிறார்கள்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க கடந்தகால அரசும், அதிகாரிகளிடத்தில் பல புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களை அணிசேர்த்து சங்கம் அமைக்கும் நடவடிக்கைகளையும் ஆலை முதலாளிகள் முற்றிலும் மறுத்து வருவது மட்டுமல்ல, தொழிலாளர்களை வெளியே செல்வதற்கு கூட அனுமதிப்பதில்லை.
பல ஆலைகளில் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு பலியாக்கப்பட்டுள்ளனர். பல இளம் பெண்கள் இதனை வெளியே சொல்ல முடியாமல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இது சம்பந்தமாக பல காவல் நிலையங்களில் புகார் பதியப்பட்டுள்ளது.
“மனித உரிமை மீறல்”, பேச்சுரிமை, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை ஆலை முதலாளிகளால் மறுக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச சம்பளம் கூட மறுக்கப்படுகிறது.
பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயம் செய்வது பற்றி...
பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்வதற்கான குழு G.O.(D) No.437 தேதி 17.09.2020 தேதியிட்டு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இக்குழு இரண்டு முறை கூடியது. அதன்பின் கூடவே இல்லை. பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்யும் குழு உடனடியாக கூடி ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான வகையில் உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.
பருத்தியை மூலப் பொருளாகக் கொண்டு செயல்பட்டு வரும் பஞ்சாலைத் தொழிலில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கும் தொழிலாக இருந்து வருகிறது. இதில் அரசு அதிக கவனம் செலுத்தி தொழில் - தொழிலாளர் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தொழிலாலர் துறை அதில் பணிபுரியும் அதிகாரிகள், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் நடத்தாத நிர்வாகங்களின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க தொழிலாளர் துறை முனைப்புக் காட்ட வேண்டும்.
தமிழகத்தில் மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது நிலையாணையில் சட்டமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து வேலை பழகும் காலம் 6 மாதம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மேற்படி சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆலைகளில் பல பெயர்களில் வைத்து வேலை வாங்குவதை தடை செய்து அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற நிலையை மாண்புமிகு தளபதி முதலமைச்சர் காலத்தில் உருவாக வேண்டும்.
மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள இக்காலத்தில் மேற்காணும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை உருவாக்கி தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தொழிற்சங்கங்களை அழைத்து தொழில் ரீதியான ஊதிய உயர்வு, பஞ்சப்படி மற்றும் உள்ள சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.