கோவை: தொழில் முனைவோர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சலுகைகள் வேண்டி தமிழ்நாடு மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம் காட்மா சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பப்பட்டது.
கோவை: தொழில் முனைவோர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சலுகைகள் வேண்டி தமிழ்நாடு மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம் காட்மா சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பப்பட்டது.
தமிழ்நாடு மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம் காட்மா சங்கத்தின் சார்பில் அளித்த கோரிக்கை மனுவில், ‘‘கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. எங்களது காட்மா சங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எண்ணிக்கையில் அதிகமான தொழில் முனைவோர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும், தொழில் முனைவோர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், தொழில் முனைவோர்களின் GST குறித்த வேண்டுகோள்கள் இங்கே கோரிக்கைகளாக தங்களிடம் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள GST வரியில், லேபர் சார்ஜ் அடிப்படையில், ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான GST வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும்.
தற்போது GST கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு பொருளை விற்பனை செய்த விற்பனையாளர் பிரதி மாதம் 11-ம் தேதிக்குள் தங்களது GST கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், பொருளை வாங்கிய வாடிக்கையாளர் அவர் செலுத்திய GST வரியை உள்ளீட்டு வரியாக (ITC) எடுக்க இயலாது என்ற GST விதிமுறை வாபஸ் பெறப்பட வேண்டும். GST அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, கடந்த பிப்ரவரி 2021 வரை நாடு முழுவதும் GST ரிட்டர்ன் தாக்கல் செய்யப்படாததால் 8,20,481 GST கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், தொழில் மந்த நிலையினாலும், வணிக வரித்துறையினரால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தினாலும் GST கணக்கை சரண்டர் செய்தவர்கள் 7,34,405. இதன்படி ஏறக்குறைய 16 லட்சம் தொழிற்கூடங்கள் நாடு முழுவதும் GST -யினால் மூடப்பட்டுள்ளன. தொழில் முனைவோர்கள் GST வரி செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை.
ஆனால், நடைமுறையில், ஒரு குறுந்தொழில் (முனைவோர் தாம் செய்யும் வேலைக்கு பில் போடும் பொழுது அதற்கு உண்டான பேமெண்டை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதற்கு 90 முதல் 180 நாட்கள் வரை கால தாமதம் ஆகிறது. ஆனால், அந்த பில்களுக்கான GST வரியை பிரதி மாதம் 20-ஆம் தேதிக்குள் தொழில் முனைவோர் செலுத்த வேண்டியிருக்கிறது. வாடிக்கையாளரிடம் இருந்து பேமெண்ட் கிடைப்பதற்கு காலதாமதம் ஆனாலும் கூட தொழில் முனைவோர் அதற்கான GST வரியை செலுத்தி விட வேண்டி இருப்பதால், அதற்காக கந்துவட்டி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்க வேண்டியுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட கடன்களுக்கான தவணைகள் மற்றும் வட்டியையும் கூடுதலாக ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டியிருப்பதால் தொழில் முனைவோர் தங்களது தொழிலிற்கு செய்ய வேண்டிய முதலீடு வெகுவாக குறைந்து விடுகிறது. மேலும் தாமதமாக GST வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராதத் தொகையும் அதிகமாக இருக்கிறது. எனவே, GST வரி செலுத்த தயாராக இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு, எவ்விதமான வட்டியோ அல்லது அபராதமோ இன்றி, அவர்களது GST நிலுவை தொகையை மட்டும் செலுத்திக் கொண்டு தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை மீண்டும் தொடர அனுமதித்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் முனைவோர் மீண்டும் தங்களது தொழிலை தொடர்வதற்கு பேருதவியாக இருக்கும். இதன் மூலம் நாட்டின் வரி வருவாயும் அதிகமாகும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சில பொருட்களை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கான மூலப்பொருட்களுக்கு GST வரி விகிதம் அதிகமாகவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் பொழுது அதற்கான GST வரி விகிதம் குறைவாகவும் உள்ளது, இதுவும் தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த நெருக்கடியை அளிப்பதாக உள்ளது.
GST ரிட்டர்ன் தாக்கல் செய்யாமலோ அல்லது GST செலுத்தாமலோ இருக்கும் ஒரு தொழில் முனைவோர், தங்களது GST கணக்கு முடக்கபட்ட 30 நாட்களுக்குள் முழு GST நிலுவை தொகையை வட்டியுடன் செலுத்தாவிடில், தீர்ப்பாயத்தில் முழு வரி நிலுவையை, உள்ளீட்டு வரியை (ITC) கழிக்காமல், வட்டி மற்றும் அலுவலர்கள் நிர்ணயிக்கும் அபராதம் ஆகியவற்றையும் சேர்த்து முழுவதும் செலுத்திய பிறகு, செலுத்திய ஆவணத்துடன் மேல் முறையீடு செய்து, தீர்ப்பு கிடைக்கப்பெற்ற பின்புதான் தங்கள் GST கணக்கை புதுப்பித்து, தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய முடிகிறது. இவ்வாறு செய்வதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் வரை ஆகிவிடுகிறது. GST மாதாந்திர கணக்கு தாக்கல் செய்யாத ஒரு GST கணக்கு எண் அதிகாரிகளால் முடக்கப்படுகின்றது. ஆனால் அதையே GST கணக்கு எண்ணை, வரி முழுவதும் செலுத்தி திரும்பவும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முறையீடு செய்தால் மட்டுமே நடைமுறைக்கு வருவதால் கால தாமதத்திற்கு வழிவகுத்து தொழில் முனைவோர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குகிறது.
ஒரு குறுந்தொழில் முனைவோர் தனது வாடிக்கையாளரிடம் இருந்து E Way பில்கள் மூலம் பொருட்களை பெற்று, ஜாப் ஒர்க் அடிப்படையில் அதை உருமாற்றி, மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அனுப்பும் பொழுது, வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற E Way பில்களையே உபயோகப்படுத்தி பொருட்களை திருப்பி அனுப்பிக்கொள்ள அனுமதியளித்து உதவ வேண்டும், ஒரு லேத், 2 லேத் வைத்திருக்கும், கம்ப்யூட்டர் மற்றும் E Way பில்கள் பற்றிய புரிதல் இல்லாத தொழில் முனைவோர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.
ஒரு தொழில் முனைவோர் தங்களது கணக்குகளை தாக்கல் செய்து, ஆன்லைன் ரிடர்ன் தாக்கல் செய்த பிறகு அதில் ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில், அந்தக் கணக்கில் உள்ள தவறினை மறு மாதம் மட்டுமே சரி செய்ய முடியும் என்பதை தளர்த்தி, உடனடியாக சரி செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தொழில் தொடங்குவதற்கான பதிவுச் சான்றிதழ் (RC) ஆன்லைனிலேயே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதிகாரிகள் தொழில் கூடங்களுக்கு வந்து ஆய்வு செய்த பின்பே பதிவுச் சான்று (RC) வழங்கப்படுகிறது. இது காலதாமதத்திற்கு வழி வகுக்கிறது என்பதால், முன்பை போலவே ஆன்லைனிலேயே பதிவுச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஆகிய இது போன்ற GST யில் உள்ள தொழில்களை பாதிக்கும் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் பட்சத்தில் குறுந்தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெரும் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகிய தாங்கள், பரிசீலித்து, மத்திய அரசு மற்றும் GST கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்று தொழிலையும், தொழில் முனைவோர்களையும் காப்பாற்றி உதவுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.