கோவை: கோவையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார்.
கோவை: கோவையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நலவாரிய அட்டை குடும்ப அட்டை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் சிறப்பு குறைதீர் முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கு அவர்களுக்கு நலவாரிய அட்டை வழங்குவது ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது போன்ற செயல்முறைகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான தடுப்பூசி முகாமையும் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்றாம் பாலினத்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே முகாமின் நோக்கம். மூன்றாம் பாலினத்தவர்கள் அவர்களின் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவே இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இந்த முகாமானது நடைபெறுகின்றது. மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த முகாமிற்கு வந்து கோரிக்கைகளை அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கான மருத்துவ மற்றும் தடுப்பூசி முகாமும் நடைபெறுகிறது. நலவாரிய அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் பொதுமக்கள் இருக்கும் இடத்தில் வீட்டுமனை வழங்கப்பட வேண்டுமா அல்லது தனி இடத்தில் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து அவர்களிடம் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட இடத்தை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார்.