கோவை: வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் மீதான நிலுவையிலுள்ள வழக்குகள்... நடவடிக்கை கோரி முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ கடிதம் எழுதியுள்ளார்.
கோவை: வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் மீதான நிலுவையிலுள்ள வழக்குகள்... நடவடிக்கை கோரி முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான எம்.ஆறுமுகம் எழுதியுள்ள கடிதத்தில்,
‘‘வணக்கம். வால்பாறை நகராட்சி ஆணையாளராக பொறுப்பிலிருந்து, பின்னர் மாநகர குற்றப்பிரிவில் ஊழல் குற்ற வழக்கு பதியப்பட்டதன் பேரில், கட்டாய விடுப்பில் விடுவிக்கப்பட்டுள்ள பவுன்ராஜ் மீது பல்வேறு புகார்கள், பல்வேறு தரப்பினரால் கடந்த காலங்களில் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேற்படி பவுன்ராஜ் வால்பாறை நகராட்சி ஆணையாளராக பதவி வகித்ததற்கு முன்பு கடையநல்லூர் நகராட்சி ஆணையராகவும், புளியங்குடி நகராட்சி ஆணையராகவும்(பொறுப்பு) பணிபுரிந்துள்ளார்.
மேற்படி பொறுப்புகளை பவுன்ராஜ் வகித்தபோது, அவர் மீது ஊழல் முறைகேடுகள் சம்பந்தப்பட்ட புகார்கள் மட்டுமின்றி, போலி ஆவணங்கள் தயாரித்தல், வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு, அப்பாவி பொதுமக்களை அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட புகார்களும் ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அவ்வப்போது. அளிக்கப்பட்டுள்ளன. மேற்படி புகார்களில் குற்ற வழக்குகளில் மட்டும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கூற்றிற்கேற்ப மேற்படி பவுன்ராஜ், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் (SC) சேர்ந்தவர் என போலியான சாதிச் சான்று கொடுத்து மேற்படி அரசுப்பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு பவுன்ராஜ் வகித்த அனைத்து பதவிகளிலும், மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தனக்கு சாதகமான, சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. பவுன்ராஜ், தன் மீது புகார் தெரிவிப்பவர்களை அடியாட்களை கொண்டு மிரட்டுவதும், அடித்து துன்புறுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவையனைத்தையும் மீறி, பவுன்ராஜ் மீதான புகார்களும், குற்றச்சாட்டுகளும் தாங்கிய மனுக்கள் அரசின் கதவைத் தட்டி வருகின்றன. ஆனால், பல்வேறு: குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பவுன்ராஜ் இதுவரை துறை ரீதியான விசாரணையைக்கூட எதிர் கொண்டதில்லை, காவல் துறையால் கைது செய்யப்பட்டதில்லை. பவுன்ராஜின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கும் எவ்வித குந்தகமும் ஏற்பட்டதில்லை.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள், மண்டல இயக்குநர், நகராட்சி நிர்வாகம், திருநெல்வேலி அவர்களுக்கு கடந்த 17.05.2019 தேதியன்று அனுப்பிய ந.க. கே4/19323/2019 கடிதத்தில் மேற்படி பவுன்ராஜ் மீதான புகார்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், மேற்படி பவுன்ராஜ் மீதான புகார்கள் பட்டியலிடப்பட்டு, .தகுந்த ஆதாரங்களுடன் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் முறையீட்டு மனுக்கள் 14/19, 87/19 மற்றும் 131/19/ந/2019 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. மேற்படி பரிசீலினையின் முடிவில் கடந்த 01.11.2019 தேதியன்று பவுன்ராஜ் மீதான குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரகம் மூலமாக விசாரணை மேற்கொண்டால் மட்டுமே குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை தன்மையை அறிய இயலும் எனக் குறிப்பிட்டு மேற்படி வழக்கினை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரகம் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை மேற்படி உத்தரவு செயல்படுத்தப்படாமல் உள்ளது.
மேலும், மேற்படி பவுன்ராஜ் சட்டத்திற்கு புறம்பாக, தான் சம்பாதித்த பணத்தில் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பெயரில் பல அசையும் மற்றும் அசையா சொத்துகளையும் வாங்கியுள்ளார். மேலும், அவர் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பெயரில் தொழிற்சாலைகளையும், பால்பண்ணை மற்றும் செங்கல் சூளைகளையும் நடத்தி வருகிறார். மேலும் அவரது நண்பரான பாஞ்சாலிக்கனி என்பவருக்கு சுமார் ரூ.1,10,00,000/- (ஒரு கோடியே பத்து இலட்சம்) சந்தை மதிப்புள்ள இடத்தை புளியங்குடி. சார் பதிவு அலுவலக ஆவண எண்.3191/2018 மூலம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும், மேற்படி பவுன்ராஜ் மீது புளியங்குடி காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்தவர்களை தாக்கியதாக 109/2019 என்ற வழக்கும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் தனியார் இடத்தில் பூட்டை உடைத்து அத்துமீறி பிரவேசித்து சேதப்படுத்தியதாக 340/2017 என்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.
மேலும், மேற்படி பவுன்ராஜ் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றிய போது கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததோடு மட்டுமல்லாமல், மேற்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக ரூ.12,00,00,000/- (பன்னிரெண்டு கோடி) ரூபாயை வால்பாறை நகராட்சிப் பணிகளுக்காக அ.தி.மு.க ஆதரவு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து நான் தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களுக்கு கடந்த 26-03-2021 மற்றும் 29-03. 2021 தேதிகளில் புகார் தெரிவித்திருந்தேன். மேற்படி பவுன்ராஜ், சுமார் 80,0000 பேர் மக்கள் தொகை கொண்ட, தேயிலைத் தோட்டத் தொழிலாளர் அதிக அளவில் வசிக்கும் வால்பாறையிலேயே ரூபாய் நூறு கோடிக்கும் மேலாக ஊழல் செய்துள்ளார்.
மேலும், பவுன்ராஜ், தனது கடந்தகால அனுபவங்களைக் கொண்டு வால்பாறை நகராட்சியிலும் இல்லாத பணிகளுக்கும், செய்யாத பணிகளுக்கும் நூறு கோடி ரூபாய்க்கு மேலாக செலவு செய்ததாக கணக்கு காட்டி தவறான வழிகளில் சொத்துகளை சேர்த்துள்ளார். கீழ்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள செலவினங்கள், பவுன்ராஜ் வால்பாறை நகராட்சியில், அவர் செய்துள்ள மொத்த ஊழலில் ஒரு சிறு பகுதியாகும்.
எனது மேற்படி புகாரின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கோயம்புத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் பிரிவில் 14/2021 என்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த 14-06-2021 தேதியன்று கோயம்புத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் பிரிவில் 17/2021 என்ற வழக்கும் பதியப்பட்டுள்ளது. மேற்படி 14/2021 என்ற வழக்கில் மட்டும் உயர் நீதிமன்றம் பவுன்ராஜ்க்கு பிணை வழங்கியுள்ளது.
மேற்படி பவுன்ராஜ் மீது, அடியாட்களைக் கொண்டு புகார் அளிப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் சொத்துகளை சேதப்படுத்துவது, சட்டத்திற்கு புறம்பான வழிகளில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்து சொத்து சேர்ப்பது, தவறான தகவல்களை அளித்து அரசுப்பணி பெறுவது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை புறந்தள்ளி ஒருதலைப் பட்சமாக அரசு நிர்வாகத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல புகார்கள், வழக்குகள், முறை மன்ற நடுவத் தீர்ப்புகள் நிலுவையிலிருந்தாலும், இதுவரை மேற்படி பவுன்ராஜ், கைது செய்யப்படவோ அல்லது துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் மேற்படி செயலானது, மேற்படி பவுன்ராஜ்க்கு அரசு நிர்வாக்த்தில் உள்ள செல்வாக்கை பறை சாற்றுகிறது.
தி.மு.க ஆட்சியில், தாங்கள் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, உள்ளாட்சி நிர்வாகம் சிறப்புற மக்கள் பணியாற்றி வந்தது. இதுபோன்ற புகார்கள் தமிழகத்தில் எங்கும் எழவில்லை. ஆனால், கடந்த அ.தி.மு.க அரசு உள்ளாட்சித்துறையை எவ்வாறு நிர்வகித்தது என்பது குறித்து அறிந்துகொள்ள மேற்படி சம்பவமே ஒரு உதாரணமாகும்.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பணியில் சேர்ந்த குறுகிய காலத்தில் அரசு நிர்வாகத்தை தவறாக வழிநடத்தி, ஊழல் புரிந்து சொத்துகளை சேர்த்து, குற்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மேற்படி பவுன்ராஜ் மீது நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும், குறிப்பாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணையை துரிதப்படுத்தி, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்வதுடன், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து, சட்டத்திற்கு புறம்பான வகையில் பவுன்ராஜ் சம்பாத்தித்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.