கோவை: கோவை ஒண்டிப்புதூர் அடுத்த செந்தில் ஜனதா நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விவசாய உரத்திற்கு பயன்படுத்தவும், அடர் வன பகுதியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் அடுத்த செந்தில் ஜனதா நகரில், 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.குறிப்பாக தமிழக முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு மக்கள் மத்தியில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கின்ற வகையில் அவரது செயல்பாடு உள்ளது.
முந்தைய அரசு கொரோனா காலத்தில், தளர்வில்லா ஊரடங்கு போட்டு பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு வருடத்திற்கு மேலாக போராடினர். அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவியேற்ற போது, கொரோனா பாதிப்பு 26 ஆயிரமாக இருந்தது. முதல்வரின் அயராது உழைப்பால், கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில், ஓர் ஆண்டு காலம் போராடிய நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆக்ஸிஜன் தேவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதும், 40 தினங்களில் கொரோனாவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும், ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம், முதற்கட்டமாக 2 ஆயிரமும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் அன்று 2 ஆயிரமும் மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்றார். அதுவும், தரமான பொருட்களை வழங்கினார். மனிதநேயத்தோடு பார்க்கும் முதல்வர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார்.
கடந்த ஆட்சிகளில், 10 ஆண்டுகாலமாக தமிழக மக்களின் நிலை கேள்விக்குறியாக இருந்தது. தமிழக முதல்வர் ஒளிமயமான எதிர்காலத்தை தருவார் என்ற நம்பிக்கை தற்போது பிறந்துள்ளது. முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது என குற்றம்சாட்டினார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் 50 ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட குப்பைகள் உள்ளது. இவற்றை தொழில்நுட்ப வகையில் பயன்படுத்த முந்தைய அரசு தவறி விட்டது. 650 ஏக்கரில் உள்ள அந்த குப்பைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விவசாய உரத்திற்கு பயன்படுத்தவும், அடர் வன பகுதியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும், நேரு விளையாட்டு அரங்கு முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்தார். 45 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்த அந்த விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படாமல் உள்ளது. அந்த நேரு விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும். ஆர்எஸ் புரத்தில் உள்ள ஹாக்கி மைதானம் முந்தைய ஆட்சியில், நாலறை கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ. 19.80 லட்சம் ரூபாயில் இந்த ஹாக்கி மைதானம் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானமாக உருவாக்கப்படும் என கூறினார்.