கோவை: பொள்ளாச்சி அருகே மேம்பாலத்தில் இருந்து 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே மேம்பாலத்தில் இருந்து 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.
பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதனடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரம் என்பவரது வீட்டின் மீது மேம்பாலத்தில் இருந்து கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. சத்தம் கேட்ட சண்முகசுந்தரம் மற்றும் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் வந்து பார்த்தபோது காரில் நான்கு இளைஞர்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியோடு, காரில் இருந்த 4 பேரை மீட்டனர். இதில் காரை ஓட்டி வந்த கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோவையைச் சேர்ந்த கௌஷிக்(26), கார்த்திக் கண்ணன்(26), மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த கோபிநாத்(26), ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த்க்கு, அண்மையில் புதிய விளம்பர ஆர்டர் பெற்றதாக கூறப்படுகிறது. இதை கொண்டாடும் வகையில் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் அழைத்து பொள்ளாச்சி வந்தார்.
பின்னர், தனது சொகுசு காரில் வடக்கிபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும்பொழுது, அங்கிருந்த ரயில்வே மேம்பாலத்தில் உள்ள வளைவு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார், உயிரிழந்த ஸ்ரீகாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, வடக்கிபாளையம் பிரிவு அருகே உள்ள மேம்பாலம் வளைவாக உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனால் மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உயரபடுத்த வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்த பொதுமக்கள், உயிரிழப்பை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.