திருப்பூர்: வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நாயை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நாயை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை சிறுவர் பூங்கா பகுதிக்குள் நேற்று இரவு சிறுத்தை உலா வந்தது. பின்னர் அங்குள்ள வீட்டின் முன் நின்றிருந்த நாயை பிடிப்பதற்கு படிக்கட்டில் நின்று கொண்டிருந்தது.

அப்போது, சுதாரித்துக் கொண்ட நாய், சிறுத்தை நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் ஓட்டம் பிடித்துள்ளது. நாய் ஓடியதை பார்த்ததும் சிறுத்தையும் நாயை விரட்டி சென்றது.
சமீப காலங்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடுவதால் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் சிறுத்தைகளை பிடிப்பதற்கு வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டு வைத்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கிறோம் என்று சொல்லி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வாழைத்தோட்டம் பகுதியில் இரண்டு கூண்டு வைத்தனர். ஆனால், இதுவரைக்கும் சிறுத்தை சிக்கவுமில்லை, அதை பிடிக்கமுடியவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறையினர் வால்பாறை டவுன் பகுதிகளில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க காலம் தாழ்த்தாமல் துரித நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.