கோவை : கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தங்க நகை தொழில் துறையினர் சார்பில் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் டேங்க், இரண்டு தினங்களில் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தங்க நகை தொழில் துறையினர் சார்ந்த சங்கங்கள் சார்பில் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் டேங்க், இரண்டு தினங்களில் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க உதவும் வகையில் கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கம், தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை தங்கம் புல்லியன் சங்கம், ரவுண்ட் டேபிள் அமைப்பு மற்றும் வாசவி க்ளப் பைவ் ஸ்டார் சார்பில் ஆக்சிஜன் டேங்க் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 27 லட்சம் செலவில் இந்த ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிவடைந்த பின்னர் 2 தினங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இது குறித்து பேசிய கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், "கொரோனா நோய்தொற்று பரவல் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை ஜுவல்லர்ஸ் சங்கத்தின் தலைவர் சபரி நாத் மற்றும் கோவை புல்லியன் மெர்சன்ட்ஸ் சங்க செயலாளர் கார்த்திக் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்க் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.27 லட்சம் செலவில் டேங்க் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்ததும் இரண்டு தினங்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கம், தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் கோவை தங்கம் புல்லியன் சங்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 2,000 பாதுகாப்பு உடைகள் (PPE kit) மற்றும் 3,000 (Face Shield) மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன. மிகவும் நெருக்கடியான சூழலில் மக்களுக்கு உதவுவது மிகுந்த மன திருப்தியை அளிக்கிறது. எதிர்வரும் நாட்களில் தங்க நகை தொழில் துறையினர் மேலும் பல உதவிகளை செய்ய உள்ளோம்,”என்று கூறினார்.