கோவை: கொரோனா இரண்டாம் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கோவையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே, கொரோனா சிகிச்சைக்காக ஐந்து குழந்தைகள் அனுமதிப்பட்டனர்.
கோவை: கொரோனா இரண்டாம் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கோவையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே, கொரோனா சிகிச்சைக்காக ஐந்து குழந்தைகள் அனுமதிப்பட்டனர்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்தது. மேலும் சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தைத் தொடர்ந்து கோவையிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000 தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,566 பேருக்கு உறுதியானதால், புதிய உச்சத்தை பெற்றது.
இந்தநிலையில் கொரோனா இரண்டாம் பரவலில் தற்போது இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு ஏற்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்தியேக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பந்தைய சாலையில் உள்ள மாசாளிக் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே கொரோனா பாதிப்பு உறுதியான ஐந்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் முதல் கட்டமாக 25 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து படுக்கைகளுக்கும் தனியாக ஆக்ஸிஜன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியான குழந்தைகளுடன் இருக்க, தாயாருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாயாருக்கு லேசான தொற்று பரவல் இருந்தால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள், கொரோனா சிகிச்சை மையத்தில் 24 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பின் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.