கோவை: தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டார்.
கோவை: தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதில், 901 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு அங்கு தீவிர பாதுகாப்பு பணிகளுடன் தேர்தல் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 65 சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 137 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். இவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 126 ஆண் வேட்பாளர்கள், 11 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் அதிகபட்சமாக கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதகிளில் தலா 21 பேரும், கோவை வடக்கு தொகுதியில் 20 பேரும் போட்டியிட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 75.16, சூலூரில் 75.49 , கவுண்டம்பாளையத்தில் 66.11 , கோவை வடக்கில் 59.08, தொண்டாமுத்தூர் 71.04, கோவை தெற்கு 60.72, சிங்காநல்லூர் 61.68, கிணத்துக்கடவில் 70.30, பொள்ளாச்ச்சி 77.28, வால்பாறையில் 70.10 என மொத்தம் சராசரியாக 68.32 சதவீதம் பதிவாகின. இந்நிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் 9.76 லட்சம் வாக்காளர்கள் - அதாவது 31.68 சதவீதம் பேர் ஓட்டு போடவில்லை. மாவட்டத்தில் 21,05,673 வாக்காளர்கள் அதாவது 68.32 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். 31.68 சதவீதம் பேர் அதாவது, 9,76,355 பேர் ஓட்டு போடவரவில்லை. ஆண் வாக்காளர்கள் 15,19,027 பேர் உள்ளனர். இவர்களில் 10,49,917 பேர் ஓட்டு போட்டனர். அதாவது 69.12 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர். பெண் வாக்காளர்கள் 15,62,573 பேர் உள்ளனர். இவர்களில் 10,55,653 பேர் ஓட்டு போட்டனர். அதாவது 67.65 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டு போட்டனர்.
கோவையில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் ஆண்களை காட்டிலும் பெண்கள் சுமார் 2 சதவீதம் குறைவாகவே ஓட்டு பதிவு செய்துள்ளனர். ஓட்டு சதவீதத்தை கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 0.16 சதவீதம் கூடியிருந்தது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் துவங்கியது. இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 10 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கைக்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு தனித்தனியாக வழி அமைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு வந்த அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. சான்றை காண்பித்து தான் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு வந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேர்தல் ஆணைய பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மட்டுமே செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதலில் ராணுவத்தினர் செலுத்திய தபால் ஓட்டு, பின்னர் அரசு ஊழியர்கள், தொடர்ந்து 80 வயதுக்கு மேற்பட்ட முதியேர்கள், மாற்றுத்திறனாளிகள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டு எண்ணுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 மேஜைகள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. வாக்கு எண்ணிக்கை விபரங்கள் மேஜை வாரியாக கணினியில் பதிவு செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு அலுவலர், ஒரு உதவியாளர், மத்திய அரசு பணியில் உள்ள ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.