கோவையில் கொரோனா தடுப்பூசி செலுத்த செல்பவர்களுக்கு பாஜக சார்பில் இலவச வாகன வசதியை அக்கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவையில் கொரோனா தடுப்பூசி செலுத்த செல்பவர்களுக்கு பாஜக சார்பில் இலவச வாகன வசதியை அக்கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தடுப்பூசி போட இலவசமாக மக்களை அழைத்து செல்லும் வாகன சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்:
கொரோனா முதல் அலையை திறமையாக கையாண்டு மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது போலவே பா.ஜ.க அரசு இரண்டாம் அலையையும் திறம்பட செயல்பட்டு கட்டுப்படுத்தும்.
பாஜக தொண்டர்கள் மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகின்றனர். மேலும், மக்களுக்கு தேவையான அனைத்து வகை சேவைகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
இந்தியா மற்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக செயலாற்றிதடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி நோய் கட்டுப்பாட்டை தீவிரமாக முன்னெடுத்து செயல்படுகிறது.
தடுப்பூசி போட இலவசமாக மக்களை அழைத்து செல்லும் வாகன சேவை மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் விதத்தில்கொரோனா விழிப்புணர்வு வாகன சேவையையும் இன்று முதல் தொடங்கி வைக்கிறோம். மக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்ட எங்கள் உதவி மையத்தை தொடர்பு கொண்டால் தடுப்பு ஊசி செலுத்தி ஆர்வம் உள்ள நபர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்ட பின்னர் அவர்களின் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்போம்.
மேலும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் உதவி மையத்தை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுப்போம். அதற்காக பாஜக மாவட்டத் தலைவர் ஆர். நந்தகுமார் தலைமையில் குழு அமைத்து செயல்படுகிறோம்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். எங்கெல்லாம் தட்டுப்பாடு உள்ளதோ அங்கெல்லாம் உடனே ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டதுதான் உள்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்பது போன்ற ஒரு கருத்து இருக்கிறது அது முற்றிலும் தவறானது. அனைவருக்கும் தடுப்பூசி போட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.