கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள 181 வாக்குச்சாவடியை பார்வையிட சென்றபோது, பாஜக - அதிமுகவினர் தாக்க முயற்சித்ததாக கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திகேய சிவசேனாதிபதி பேசுகையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக செல்வபுரம் பகுதியில் உள்ள 181 வாக்குச்சாவடியில் அதிமுகவினர் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர்கள் மற்றும் பாஜகவினர் மிரட்டல் விடுத்து, தாக்கவும் முயற்சித்தனர்.
இந்த சம்பவம் நிகழ்வதற்கு உறுதுணையாக இருந்த இரண்டு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளோம். மேலும் அதிமுக, பாஜக குண்டர்கள் காவல்துறையினரின் லத்தியை பிடுங்கித் தாக்கினர்.
ஆய்வாளர், உதவு ஆய்வாளர் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் வந்து தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்த சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம். தொடர்ந்து, ஐ.ஜி., காவல்துறை ஆணையரிடமும் ஆகியோரிடமும் புகார் அளிக்க உள்ளேன் எனத் தெரிவித்தார்.
மேலும், தோற்று போவோம் என்ற அச்சத்தில் வேலுமணி இவ்வாறு செய்கிறார். புகாரின் மேல் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, வாக்குச் சாவடியில் இருந்து கிளம்பிய கார்த்திகேய சிவசேனாபதியின் வாகனத்தை அதிமுக குண்டர்கள் ஆக்ரோஷமாக உடைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.