நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மலைகிராம மக்கள் வாக்களிக்க வசதியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மலைகிராம மக்கள் வாக்களிக்க வசதியாகவாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 112 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகள் இணைய வழி கேமராவால் கண்காணிக்கப்படும்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 5,86,950 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு பணிக்காக 5700 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் அலுவலர்களில் 3992 பேர் தபால் வாக்களித்துள்ளனர்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2490 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து, 2276 பேர் வாக்களித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மே மாதம் 2ம் தேதிக்குள் வாக்களிக்கலாம்.
மலைகிராம மக்கள் சிரமமின்றி வாக்களிக்க அரசு போக்குவரத்து கழக உதவியுடன் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வனத்துறையினர் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் என மொத்தம் 3,845 இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இதுவரை ரூ.2.46 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.2 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.