கோவை; திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ஜோதி மணி, அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் தமிழகத்துக்கு துரோகம் செய்கின்றனர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
கோவை; திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ஜோதி மணி, அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் தமிழகத்துக்கு துரோகம் செய்கின்றனர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது,
“புதிய கல்வி கொள்கையின்படி விவசாயம் செய்வோரின் குழந்தைகள் விவசாயம் செய்ய வேண்டும். நெசவாளர்களின் குழந்தைகள் நெசவு செய்ய வேண்டும். கூலி வேலைக்கு செல்பவரின் குழந்தை கூலி வேலை செய்ய வேண்டும். செருப்பு தைப்பவரின் குழந்தை செருப்பு தான் தைக்க வேண்டும். இதுதான் ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தம்.
இப்படிப்பட்ட புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றத் துடிக்கிறார் மோடி. இதை பின்வாசல் வழியாக தமிழகத்திற்குள் கொண்டு வர அதிமுக அரசு நினைக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவை பாஜக-வுக்கு அடிமை ஆக்கியிருக்க மாட்டார் என்று உறுதியாக சொல்ல முடியும்.
ஆனால் இன்று பாஜகவை பின்வாசல் வழியாக தமிழகத்திற்குள் கொண்டு வருகிற வேலையை இரண்டு அமைச்சர்கள் செய்கிறார்கள். முதலாவது நபர் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் எஸ் பி வேலுமணி. மற்றொருவர் குமாரபாளையத்தில் போட்டியிடும் தங்கமணி. இந்த வேலுமணியும் தங்கமணியும் தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்வதுடன், அதிமுகவுக்கும் துரோகம் செய்கிறார்கள்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணிக்கு விழுகிற ஒவ்வொரு வாக்கும், தமிழகத்தின் ஆதாரமாய் விளங்கும் இட ஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு எதிரான வாக்கு என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பிஜேபி என்கிற விஷவிதை நுழைந்து விடக்கூடாது என்ற கருத்தில் கார்த்திகேய சிவசேனாபதிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.’ இவ்வாறு ஜோதிமணி உரையாற்றினார்.