கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் வெள்ளலூர் கிடங்கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன.
இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், அங்கு தீயணைப்பு வீரர்களுடன் நிரந்தரமாக தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிடங்கின் ஒரு பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவியதால் தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் 4 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
கடந்த 4 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி இதே குப்பைக் கிடங்கில் தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் இன்று மூன்றாவது முறையாக குப்பைக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.