கோவை மாநகராட்சி பகுதியில் கூடுதலாக ஒரு கொரோனா சிகிச்சை மையம் திறக்க திட்டம் - கலெக்டர் தகவல்
கோவை: கோவையில் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் கடந்த 15 நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, முன்தினம் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தற்போது, தமிழக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கோவை 2-ம் இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடுதலாக மாநகராட்சி உதவியுடன் ஒரு கொரோனா சிகிச்சை மையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜமணி கூறியதாவது:-
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 665 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 100 அவசர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகளாகும். இங்கு, தற்போது 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதியுள்ள படுக்கைகள் காலியாக உள்ளன. இதுதவிர கோவை அரசு மருத்துவமனையில் 555 படுக்கைகள் உள்ளன. இங்கு 25 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீதி படுக்கைகள் காலியாக உள்ளன.
இதுதவிர, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்160 படுக்கைகளும், மதுக்கரை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளும் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. மேலும், ஊரக பகுதியான மத்தாம்பாளையத்தில் உள்ள கருண்யா கொரோனா சிகிச்சை மையத்தில் 607 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு 58 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீதி படுக்கைகள் காலியாக உள்ளன. மேட்டுப்பாளையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாநகராட்சியின் உதவியுடன் கூடுதலாக ஒரு கொரோனா சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு கோவை ஆட்சியர் ராஜாமணி கூறினார்.