கோவை: வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை: வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்பட அனைத்து பணிகளும் தற்போது ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையும் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் பணி செயலி உள்பட பல்வேறு வசதிகளை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முத்தாய்ப்பாக வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யவும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதற்கான மனுவை பூர்த்தி செய்து அதில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆன சொத்து பற்றிய விவரங்கள் வாக்காளர் பட்டியல் நகல் உள்பட பல்வேறு தகவல்களை இணைக்க வேண்டும். இதற்காக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் நேரடியாக செல்வதற்குப் பதில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுவிதா என்ற இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் நேரடியாக தேர்தல் அதிகாரியைச் சந்தித்து அவரிடம் வேட்புமனு தாக்கல் செய்வது போன்று ஆன்லைனில் சுவிதா இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்களுக்கு பதிலளித்து அதற்கான ஆவணங்களையும் இணைத்து ஆன்லைனில் பதிவு செய்தால் அந்த மனு பரிசீலனைக்கு அனுப்பப்படும். மேலும் அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்தாலும் தேர்தல் அதிகாரியிடம் அந்த மனுவின் ஒரு நகலை நேரடியாக கொடுக்கவேண்டும்.
ஆன்லைனில் பெறப்படும் வேட்புமனுக்களை மற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்படுவதுபோல அந்த மனுவும் பரிசீலனை செய்யப்படும். சமீபத்தில் பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு தமிழகத்தில் தற்போதுதான் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.