கோவை: தென் மாவட்ட மக்களின் நலன் கருதி, நிறுத்தப்பட்ட கோவை – ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: தென் மாவட்ட மக்களின்நலன் கருதி, நிறுத்தப்பட்ட கோவை – ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல் வழியாக ராமேஸ்வரத்துக்கு மீட்டர்கேஜ் பாதையில் முன்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கோவை - போத்தனூர் -பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும்பணிகள் மேற்கொள்வதற்காக அந்த ரயில் சேவையும், கோவை - பழனி வழியே மதுரையை இணைக்கும் பல ரயில்களும் நிறுத்தப்பட்டன.
ஆனால், கோவை - போத்தனூர் - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரைகோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பல ரயில்கள் இந்த கோவை - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் பாதையில் அகலப்பாதை ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் லட்சக்கணக்கான தென் மாவட்ட மக்கள் உள்ளிட்ட பலர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
நீண்டதூர பயணத்துக்கு பேருந்துகளில் பயணிப்பதைவிட ரயில்களில் பயணிப்பதையேவயதானவர்கள் உள்பட பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். கட்டணம் குறைவாக இருப்பதுடன் பாதுகாப்பும், குறித்த நேரத்தில் சென்றடைய முடிகிறது என்பது உள்பட ரயில் போக்குவரத்து கொண்டுள்ள சிறப்பம்சங்களே இதற்குக் காரணம். மேலும் ரயில் வசதி இல்லாததால், கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் தனியார் ஆம்னி பஸ்களில் அதிகக் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட இந்த ரயில்களை மீண்டும் இயக்க,தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பயணிகளின் ஒன்றுபட்ட கருத்தாகும்.
ஆகவே கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான தென் மாவட்ட மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட கோவை – ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.